இந்தப் பாடலை சுப்பு தாத்தா குரலில் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!
கார்மேக நிறங் கொண்ட கருணைமிகு கணபதியே
உன்பாதம் சரணமய்யா
பார்போற்றும் சதிபதியாம் பரமசிவன் பார்வதியின்
புதல்வனே சரணமய்யா
பேர்கொண்ட முதற்பிள்ளை தானென்று திகழும்உன்
திருப்பாதம் சரணமய்யா
மார்தன்னில் திருமகளைத் தாங்குகின்ற மாலவனின்
மருமகனே சரணமய்யா
வித்துக்கு வித்தாகி முத்தான முதற்பொருளே
முதல்வனே சரணமய்யா
சக்திக்குச் சொத்தான மத்தகக் கணபதியே
மலர்ப்பாதம் சரணமய்யா
தொந்திக்குள் உலகத்தை பந்தைப்போல் வைத்தாளும்
கஜமுகனே சரணமய்யா
வந்தித்து அனுதினமும் சிந்தித்து உனைப்பணிந்தோம்
சிவைமைந்தா சரணமய்யா
சுழிபோட்டு தொடங்கிவிட்டால் வழியெல்லாம் நேராக்கி
அருள்புரிவாய் போற்றி போற்றி
அழியாத வினைகளையும் பொழிகின்ற கருணையினால்
அழித்திடுவாய் போற்றி போற்றி
மரத்தடியாய் இருந்தாலும் மறுக்காமல் குடியேறும்
மயூரேசா போற்றி போற்றி
சிரத்தையுடன் பணிகின்றோம் சீக்கிரமே வந்திடுவாய்
திருவடிகள் போற்றி போற்றி!
--கவிநயா
No comments:
Post a Comment
வாங்க, வணக்கம்!