Sunday, October 31, 2010

கந்தா கடம்பா கதிர்வேலா!



கந்தா கடம்பா கதிர்வேலா
காத்திட வருவாய் சிவபாலா
கார்த்திகை மைந்தா கதிர்வேலா
காத்திட வருவாய் சிவபாலா!

அழகா அமுதா அருள்வேலா
அம்பிகை மைந்தா எழில்பாலா
அறுமுக நாதா அருள்வேலா
அடிமலர் பணிந்தோம் எழில்பாலா!

வருவாய் வருவாய் வடிவேலா
வள்ளி மணாளா உமைபாலா
தருவாய் தருவாய் வடிவேலா
திருவருள் தருவாய் உமைபாலா!


--கவிநயா

Monday, October 25, 2010

அனுமந்தா அனுமந்தா...


அனுமந்தா அனுமந்தா
அஞ்சனை மைந்தா அனுமந்தா!
அனுமந்தா அனுமந்தா
ஆஞ்ச நேயா அனுமந்தா!

ஆஞ்ச நேயா அஞ்சனை மைந்தா
அஞ்சாத வீரா அனுமந்தா!
துஞ்சாமல் அனுதினம் கண்போல ராமரை
நெஞ்சார போற்றிடும் அனுமந்தா!

கதிரவன் தன்னை பழமென்று எண்ணி
கைகளில் பிடித்தாய் அனுமந்தா!
காற்றினில் ஏறி கடலினைக் கடந்து
இலங்கையைப் பொடித்தாய் அனுமந்தா!

புத்தியில் பக்தியில் சக்தியில் உனக்கு
நிகரில்லை எவரும் அனுமந்தா!
அத்தனை இருந்தும் அடக்கத்தின் உருவாய்
திகழ்பவன் நீயே அனுமந்தா!

கருத்திட்ட வண்ணன் கமலக் கண்ணன்
கதையினைச் சொன்னால் அனுமந்தா!
கருத்துடன் அமர்ந்து கண்ணீர் பெருக
கேட்டிடு வாயே அனுமந்தா!

நெருப்பிட்ட வாலினை முடிவில் லாமல்
நீண்டிடச் செய்தாய் அனுமந்தா!
விருப்புடன் எந்தன் பக்தியும் அதுபோல்
வளர்ந்திட அருள்வாய் அனுமந்தா!


--கவிநயா

Monday, October 18, 2010

அன்பருக்கு அன்பன்!



அன்பருக்கு அன்பனே நீ வாவா ஷண்முகா

ஆறுபடை வீடுடையாய் வாவா ஷண்முகா

இன்பமய ஜோதியே நீ வாவா ஷண்முகா

ஈசனுமை பாலகனே வாவா ஷண்முகா

உரகசயனன் மருகோனே வாவா ஷண்முகா

ஊமைக் குபதேசித்தவா வாவா ஷண்முகா

எட்டுக்குடி வேலவா நீ வாவா ஷண்முகா

ஏறுமயில் வாகனனே வாவா ஷண்முகா

ஐங்கரக் கிளையவனே வாவா ஷண்முகா

அகிலலோக நாயகனே வாவா ஷண்முகா

ஒய்யாரி வள்ளிலோலா வாவா ஷண்முகா

ஓம்காரத் தத்துவமே வாவா ஷண்முகா

ஔவைக் குபதேசித்தவா வாவா ஷண்முகா

அருணகிரிக் கருள்சுரந்தாய் வாவா ஷண்முகா

ஆடிவாநீ ஓடிவாநீ வாவா ஷண்முகா

ஓடிவாநீ ஆடிவாநீ வாவா ஷண்முகா



வெற்றிவேல் முருகனுக்கு... அரோஹரா!!

Monday, October 11, 2010

ஆலோலம்!

ஒருவர் பாட, குழுவினர் ஹரோஹரா சொல்லணும்.
இணையத்திலிருந்து எடுத்தது. இட்டவருக்கு நன்றிகள் பல.



ஆலோலம் பாடுகின்ற
வள்ளியம்மை கழுத்தில்
அணியாரம் இட்ட பெருமான் - ஹரோஹரா

ஆகாயம் பூமியிடை
நீராவி போல் வடிவில்
ஆதாரமான பெருமான் - ஹரோஹரா

மேலாளர் கீழாளர்
பேதங்கள் இல்லாது
மெய்யான பெருமான் - ஹரோஹரா

மின்னாகி இடியாகி
மழையாகி காற்றாகி
விளைவாக நின்ற பெருமான் - ஹரோஹரா

கோலாலம்பூர் வளர்
கோ தண்டபாணி - இவன்
கோவில் கொண்டடு மனமே - ஹரோஹரா

கூற்றேதும் வாராது
கொடுநோயும் சேராது
குறையாத வாழ்வு மிகுமே - ஹரோஹரா

ஓம் என்ற சிறு முட்டை
உள் வீடு அவன் வீடு
உன் வீடும் அந்த இடமே - ஹரோஹரா

ஓசைக்கு மணியுண்டு
பூசைக்கு மணமுண்டு
உன் வாழ்வு கந்தன் வசமே - ஹரோஹரா

நாமேன்ற ஆங்காரம்
நமதென்ற எக்காளம்
நடவாது வேலனிடமே - ஹரோஹரா

நடக்கட்டும் பார்ப்போம்
என்றிருக்கட்டும் உன் உள்ளம்
நலம் யாவும் வீடு வருமே - ஹரோஹரா

கோமன்னன் வாழ்கின்ற
கோலாலம்பூர் செந்தூர்
கொடி கட்டி ஆள விடுமே - ஹரோஹரா

கொண்டாடு கொண்டாடு
தெண்டாயுதத் தானை
குறையாது செல்வ மிகுமே - ஹரோஹரா

Wednesday, October 6, 2010

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்!


வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்
வேல்முருகா வேலாயுதா வேல்முருகா வேல்வேல்

ஆறுபடை வீடு கொண்ட ஆறுமுகா வேல்வேல்
ஏறுமயில் வாகனனே வேல்முருகா வேல்வேல்

ஓம்முருகா என்றுதினம் உந்தன் நாமம் வேல்வேல்
ஓயாமல் ஜெபித்திருப்போம் வேல்முருகா வேல்வேல்

பாலாபிஷேகங்கள் ஏற்றுக் கொள்வாய் வேல்வேல்
பக்தர்களைக் காத்திடுவாய் வேல்முருகா வேல்வேல்

தேனாபிஷேகங்கள் ஏற்றுக் கொள்வாய் வேல்வேல்
தெரியாமல் செய்யும்பிழை பொறுத்தருள்வாய் வேல்வேல்

வாசமலர் மாலைகளை ஏற்றுக் கொள்வாய் வேல்வேல்
தேசொளிரும் பாலகனே வேல்முருகா வேல்வேல்

வீசுகின்ற தென்றல் போல வேல்முருகா வேல்வேல்
எங்கள் வாழ்வில் வந்தவனே வேல்முருகா வேல்வேல்

அன்போடு நாங்கள் செய்யும் அத்தனையும் வேல்வேல்
ஆதரவாய் ஏற்றுக் கொண்டு அருள்புரிவாய் வேல்வேல்

--கவிநயா

Monday, September 27, 2010

கண்ணனைப் பணி மனமே!



கண்ணனைப் பணி மனமே - தினமே
கண்ணனைப் பணி மனமே

மண்ணில் யசோதை செய் புண்ய சொரூபனை
மாதவனை நமது யாதவ தீபனை
கண்ணனைப் பணி மனமே

பாண்டவர் நேயனை பக்தர் சகாயனை
பவளச் செவ்வாயனை பரமனை மாயனை
கண்ணனைப் பணி மனமே

மங்கள மூலனை கோகுல பாலனை
மனம்மிகு துளசி மாலனை பாலனை
கண்ணனைப் பணி மனமே

விண்ணவர் போற்றவே மண்ணில்வரும் வேதப்
பண்ணனை சியாமள வண்ணனை தாமரைக்
கண்ணனைப் பணி மனமே


(பாடல் அனுப்பித் தந்த கண்ணன் என்கிற கேயாரெஸுக்கு நன்றி!)

Sunday, September 19, 2010

கலைநிறை கணபதி சரணம் சரணம்



(குமரன் தந்த பாடல் விளக்கம் கீழே)

கலைநிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்

சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவறு மொருபரை சரணம் சரணம்
உமைசிவை அம்பிகை சரணம் சரணம்

அரஹர சிவசுத கணபதி சரணம்
அடியவர் வினைகெட அருள்பவ சரணம்
நினைபவர் பவமற நினைபவ சரணம்
நெடியவன் விழிதரு நெடியவ சரணம்

வலவையை மருவிய புயதர சரணம்
வடிவினி லுயரிய பெரியவ சரணம்
முறைதெரி மறையவ நிறையவ சரணம்
முடியடி தெரிவரு முதியவ சரணம்

சரணம் சரணம் கணபதி சரணம்
சரணம் சரணம் கஜமுக சரணம்


படத்துக்கு நன்றி: தக்குடு

குமரன் தந்த பாடல் விளக்கம்: நன்றி குமரா!

கலை நிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவ நின் இணையடி சரணம் சரணம்
சரவண பவ குக சரணம் சரணம்

சிலை மலை உடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவு அறும் ஒரு பரை சரணம் சரணம்
உமை சிவை அம்பிகை சரணம் சரணம்

சிவ குடும்பத்தைச் சரணடையும் வரிகள் இவை. கணபதியை முதல் மூன்று வரிகளாலும், சரவணபவகுகனை நான்காவது வரியாலும், சிராப்பள்ளி மலையையும் கைலை மலையையும் உடைய சிவபெருமானை அடுத்த இரு வரிகளாலும், நடுக்கம் இல்லாதவளும் நடுக்கம் தீர்ப்பவளுமான உமை சிவை அம்பிகை பராசக்தியை அடுத்த இரு வரிகளாலும் சரணடைகிறோம்.

அரஹர சிவசுத கணபதி சரணம்
அடியவர் வினை கெட அருள்பவ சரணம்
நினைபவர் பவம் அற நினைபவ சரணம்
நெடியவன் விழி தரு நெடியவ சரணம்

முதல் மூன்று வரிகளும் கணபதியைப் போற்றுகிறது. நான்காம் வரி சிவபெருமானைப் போற்றுகிறது. ஒரு முறை ஆயிரம் தாமரைகளால் சிவபெருமானைத் திருமால் அருச்சிக்கும் போது ஒரு தாமரை குறைய தாமரைக்கண்ணன் தனது ஒரு கண்ணையே எடுத்து அருச்சித்தாராம்; அப்போது சிவபெருமான் அவரது திருக்கண் திரும்பக் கிடைக்கும் படி அருளினாராம். அக்கதையைச் சொல்கிறது இந்த வரி.

வலவையை மருவிய புயதர சரணம்
வடிவினில் உயரிய பெரியவ சரணம்
முறை தெரி மறையவ நிறையவ சரணம்
முடி அடி தெரி(ய) அரு முதியவ சரணம்

வல்லபையை அணைத்துக் கொண்டிருக்கும் வல்லப கணபதியை முதல் இரு வரிகளிலும், அடி முடி அறியவொண்ணா அண்ணாமலையானை அடுத்த இரு வரிகளாலும் போற்றுகிறது இவ்வரிகள்.

**
வலவையை மருவிய புயதரன் படம் அதனால் இந்த இடுகைக்குப் பொருத்தமாக இருக்கிறது. :)

(பொருள் தெரியாமலேயே இட்டேன், பொருத்தமாக தானே வந்து அமர்ந்து கொண்ட ஆனைமுகனின் கருணையை என்னென்பது! --கவிநயா)